நிர்வாகக் குளறுபடி: மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க முடியாமல் தேனி மாணவர்கள் ஏமாற்றம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டியில், முறையான அனுமதிப் பதிவு செய்யப்படாததால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாமல் கண்ணீருடன் ஊர் திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது மாநில சப்-ஜூனியர் ஹாக்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்கள் தமிழக மாநில அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இது இளம் வீரர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இதற்காகத் தேனி மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பயிற்சியாளருடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் ராமநாதபுரம் சென்றடைந்தனர்.
ஆனால், அங்கு சென்ற மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தேனி மாவட்ட அணியின் அனுமதிப் பதிவு (Registration) முறையாகச் செய்யப்படவில்லை எனக் கூறி, போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை விளையாட அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் நிலைகுலைந்த மாணவர்கள், அங்கு தங்குவதற்கு இடவசதியோ, முறையான உணவோ இன்றி தவித்தனர். இறுதியில் வேறு வழியின்றி போட்டியில் பங்கேற்காமலேயே தேனிக்குத் திரும்பினர்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஒரு வாய்ப்பிற்காகக் கடுமையாகப் பயிற்சி பெற்று வந்த நிலையில், சங்க நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களது உழைப்பும், எதிர்காலக் கனவும் கேள்விக்குறியாகிவிட்டதாக மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.