“நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை” – சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு மத்திய அமைச்சர் உத்தரவு!
ராஞ்சி: NCERT எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
NCERT பாடத்திட்டத்தில் நீதித்துறையைப் பற்றித் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பாடப்பகுதிகள் அமைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்துப் பேசிய அமைச்சர், “நாங்கள் நீதித்துறையை உயரிய இடத்தில் வைத்து மதிக்கிறோம். அதனை அவமதிக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு எப்போதும் கிடையாது. இது போன்ற சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை நீக்க இரண்டு நாட்களுக்கு முன்பே NCERT நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
மேலும், இந்தப் பாட அத்தியாயத்தைத் தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இந்தத் தவறுக்காக அரசின் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். மாணவர்களின் பாடப்புத்தகங்களில் தரம் மற்றும் துல்லியத்தை உறுதி செய்யக் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.