“குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா?” – எதிர்க்கட்சியினருக்குப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சவால்!
புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் காலியாக இருந்த 207 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தகுதி பெற்றவர்களுக்குப் பணி ஆணை வழங்கும் விழா கம்பர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, காவலர் தேர்வில் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறி வரும் புகார்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தேர்வில் முறையாகப் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருவதாகச் சாடினார். மேலும், காவலர் தேர்வு குறித்துக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சியினர், தங்கள் புகார்களை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறார்களா? என அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். அரசின் வெளிப்படையான செயல்பாடுகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.