பக்திக்கு ஏது எல்லை? பழனி மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி ஏந்தி ஜப்பான் நாட்டினர் நேர்த்திக்கடன்!
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா தற்போது மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாகப் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலகும்ப குருமணி ஆதீனம் தலைமையில் ஜப்பானிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினர், தமிழர்களின் கலாச்சாரப்படி பக்திப் பரவசத்துடன் தீச்சட்டி ஏந்தினர்.
தொடர்ந்து கோயிலின் உட்பிரகாரத்தை அக்னிச் சட்டியுடன் சுற்றி வந்த ஜப்பான் நாட்டு பக்தர்கள், அன்னை மாரியம்மனுக்குத் தங்களது வழிபாட்டைச் செலுத்தினர். மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து, தமிழர்களின் பாரம்பரிய ஆன்மீக வழிபாட்டு முறையில் வெளிநாட்டினர் கலந்துகொண்ட இந்தத் தருணம், அங்கு கூடியிருந்த மற்ற பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.