“ட்ரம்ப் ஒரு பொய்யர்; மோசமான அமெரிக்காவை உருவாக்குகிறார்” – வர்ஜீனியா ஆளுநர் அபிகேல் ஸ்பான்பெர்கர் காட்டம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஓராண்டு கால ஆட்சி மற்றும் அவரது வரி விதிப்பு முறைகளை விமர்சித்து, வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநர் அபிகேல் ஸ்பான்பெர்கர் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
வரி விதிப்பு விவகாரமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்:
உலக நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை (Reciprocal Tariffs), அவருக்கு அத்தகைய அதிகாரம் இல்லை எனக் கூறி அமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. இருப்பினும், தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே மற்றொரு சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அனைத்து நாடுகள் மீதும் 10% வரியைத் ட்ரம்ப் மீண்டும் விதித்தார். “நீதிமன்றத் தீர்ப்பை வைத்து நாடுகள் விளையாடினால், வரி 15% ஆக உயர்த்தப்படும்” என்றும் அவர் எச்சரித்தார். இதற்கிடையே, ஃபெட்எக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தாங்கள் செலுத்திய வரிப்பணத்தைத் திரும்பக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளன.
ட்ரம்ப்பின் உரையும் அபிகேலின் கேள்விகளும்:
தனது இரண்டாம் ஆட்சிக்காலத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ட்ரம்ப், “நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகின்றன” எனத் தெரிவித்தார். இந்த உரை நிகழ்வைப் புறக்கணித்த வர்ஜீனியா ஆளுநர் அபிகேல் ஸ்பான்பெர்கர், ட்ரம்ப் நேர்மையற்ற முறையில் பேசுவதாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க வாக்காளர்களிடம் அவர் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தார்:
- அதிபர் மக்களின் வாழ்வை எளிமையாக்கப் பாடுபடுகிறாரா?
- உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறாரா?
- உண்மையில் அமெரிக்கர்களுக்காக அவர் உழைக்கிறாரா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் “இல்லை” என்பதே பதில் என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மாறும் அரசியல் காற்று:
மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) முன்னாள் அதிகாரியான ஸ்பான்பெர்கர், “ட்ரம்ப் அமெரிக்கர்களைப் பலிகடா ஆக்குகிறார், உண்மையான தீர்வுகளை வழங்குவதில்லை” என்று சாடினார். வர்ஜீனியாவில் ஸ்பான்பெர்கரின் வெற்றி மற்றும் டெக்சாஸ் சிறப்புத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றி ஆகியவை, வரும் இடைக்காலத் தேர்தலில் ட்ரம்புக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.