நக்சலைட் கோட்டையில் மலரும் மாற்றம்: சுக்மா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் முயற்சியால் அடிப்படை வசதிகள் வருகை!
பல ஆண்டுகளாக நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்த சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், தற்போது பாதுகாப்புப் படையினரின் வருகைக்குப் பின் பெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்ட சிந்தாகுஃபா கிராமத்தில், சாலை, மின்சாரம், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். நக்சல்களின் அச்சுறுத்தல் காரணமாக அரசு அதிகாரிகள் அங்கு செல்லத் தயங்கிய நிலையில், தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.
பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால் நக்சலைட்டுகள் அப்பகுதியில் இருந்து ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்களின் நேரடி மேற்பார்வையில் மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. அடர்ந்த காடுகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகளுக்கு இடையே வீரர்களின் பாதுகாப்புடன் மின்வசதி கொண்டு வரப்பட்டுள்ளதால், கிராமத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த நக்சலைட்களின் நினைவிடங்கள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பத்தில் பாதுகாப்புப் படையினரைக் கண்டு அச்சமடைந்த மக்கள், தற்போது தயக்கமின்றி சிஆர்பிஎஃப் வீரர்களிடம் உதவி கோருவதாகவும், அரசு அமைப்புகள் மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.