அனில் அம்பானிக்குச் சொந்தமான ₹3,716 கோடி மும்பை இல்லம் பறிமுதல்: வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி!
வங்கி கடன் மோசடி மற்றும் நிதி முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனப் புகார்கள் எழுந்தன. மேலும், அந்த கடன் தொகையைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் சட்டவிரோதமாகச் சொத்துக்கள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனில் அம்பானி, அவரது குடும்பத்தினர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மும்பையின் பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள அனில் அம்பானிக்குச் சொந்தமான 17 மாடி சொகுசு இல்லத்தை அமலாக்கத்துறை தற்போது பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 3,716 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு 15,700 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான பிரம்மாண்ட இல்லம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.