துல்லிய வாக்காளர் பட்டியலை உருவாக்க ‘தேசிய பிரகடனம் 2026’ ஏற்பு: தேர்தல் ஆணையர்கள் மாநாட்டில் முடிவு
டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் மாநாட்டில், ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கான ‘தேசிய பிரகடனம் 2026’ ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஜனநாயகத்தின் அடிப்படையே பிழையற்ற வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதுதான் என்றும், தேர்தல்களை வெளிப்படையான முறையில் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்த பிரகடனத்தில் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான (பஞ்சாயத்து மற்றும் நகராட்சி) தேர்தல் சட்டங்களை, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் சட்டங்களுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையங்களும் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல்வேறு பரிந்துரைகளை ஆய்வு செய்யத் துணை தேர்தல் ஆணையர்கள் தலைமையில் சட்ட மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அடுத்த 3 மாதங்களுக்குள் மாநில வாரியான புதிய வழிமுறைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.