அயோத்தியில் அதிரடி: 13,000 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சுமார் 13 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெயை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். ரமலான் மற்றும் ஹோலி பண்டிகைகள் நெருங்கி வரும் வேளையில், சந்தையில் அதிக அளவில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.
பொதுமக்களின் புகாரை அடுத்து, அயோத்தியில் உள்ள முக்கிய எண்ணெய் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் தரம் குறைந்ததாகவும், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த விற்பனை நிலையத்தில் இருந்த சுமார் 13,000 லிட்டர் கலப்பட எண்ணெயை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். பண்டிகைக் காலத்தில் லாப நோக்கில் மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.