குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு: ஆங்கிலேயக் கலைஞர் சிலைக்குப் பதில் தமிழரின் பெருமை!
சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரலான மூதறிஞர் ராஜாஜியின் திருவுருவச் சிலை, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆங்கிலேயர் காலத்து அடையாளங்களை நீக்கி, இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளையும் தலைவர்களையும் கௌரவிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெல்லியின் முக்கிய அரசுக் கட்டடங்களை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்யன் என்பவரின் சிலை குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அகற்றப்பட்டு, அந்த இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு ராஜாஜியின் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்பித்தார். இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் கடைசி கவர்னர் ஜெனரலாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகவும் அரும்பணியாற்றிய ராஜாஜியின் பங்களிப்பைப் போற்றும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.