”தலித் என்பதால் எனக்கு எதிராக நடவடிக்கை” – அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ்
தலித் இனத்தினால் குறிவைக்கப்படுவதாக, டெல்லியில் உள்ள அரசு இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்தார்.
முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி உதித் ராஜ், 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாஜகவில் இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது அவர் அக்கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் தேசிய தலைவர். இவரது மனைவி சீமா ராஜூ, ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி. புதுடெல்லியில் பண்டாரா பார்க்கில் C1/38 என்ற எண் கொண்ட அரசு பங்களா சீமா ராஜுக்கு ஒதுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற பின் கூட அரசு பங்களாவை காலி செய்யாததால், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி காலி செய்யுமாறு கேட்டது. சீமா ராஜ் அவகாசம் கோரி மனு அளித்தார். அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து, காலி செய்ய வலியுறுத்தினர்.
இதையடுத்து, சீமா ராஜ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவர் அரசு பங்களாவை காலி செய்ய தனக்கு ஒரு மாத காலம் தர வேண்டும் என்று கோரி உள்ளார். இதற்கிடையில், அவரது வீட்டில் உள்ள பொருட்களை அதிகாரிகள் வெளியே எடுத்துவிட்டனர். இதனால் உதித் ராஜ் வீதியில் கட்டிலை வைத்து தங்கியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய உதித் ராஜ், சமீபத்தில் தற்கொலை செய்த சண்டிகரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் சம்பந்தமாக விசாரணை கோரி மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் கேட்டதற்காக தற்போது பழிவாங்கப்படுவதாக தெரிவித்தார்.
“தலித் என்பதால் எனக்கு எதிராக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பூரண் குமாரைப் போல நான் தற்கொலை செய்ய மோடி அரசு விரும்புகிறது, ஆனால் அது நடக்காது. வீடு காலி செய்யும் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. வரும் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாதா? உயர் சாதியினருக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது, ஆனால் எங்களுக்கு நெருக்கடி,” என்று உதித் ராஜ் கூறினார்.
அவர் மேலும், “மோடி அரசாங்கம் எனது வீட்டிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து சாலையில் வீசிவிட்டது. ஒரு தலித் எம்பி அல்லது தலைமை நீதிபதி இருந்தாலும், அவர்களுக்கு எதிரான செயல்கள் இதே போல் நடக்கும். பாஜக தலைவர்களின் உத்தரவின்பேரில் இது செய்யப்பட்டது,” என்று வலியுறுத்தினார்.