உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களுக்குத் தூதரகம் அவசர எச்சரிக்கை!
டெக்ரான்: அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அவசரச் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஈரானின் ரகசிய அணு ஆயுதத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. தற்போது அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்களை மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு நகர்த்தி வருவதால், இந்தப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- உடனடியாக வெளியேறவும்: ஈரானில் உள்ள இந்தியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் போக்குவரத்து வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தாமதமின்றி ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல்: நிலமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட், விசா மற்றும் அடையாள அட்டைகளை எப்போதும் கைகளில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- தொடர்பில் இருத்தல்: இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- விவரங்களைப் பதிவு செய்தல்: இந்தியர்கள் தங்களின் இருப்பிடம் மற்றும் இதர விவரங்களை www.meaers.com/request/home என்ற இணையதளத்தில் உடனே பதிவு செய்ய வேண்டும்.
அவசர உதவிக்கு:
ஏதேனும் அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:
- மின்னஞ்சல்: [email protected]
- தொலைபேசி எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் அபாயம் அதிகரித்து வருவதால், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.