ராஜாஜி பிறந்தநாள் இனி ‘ராஜாஜி உஸ்தவ்’ ஆகக் கொண்டாடப்படும்: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!
புதுடெல்லி: இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்தநாளைக் கௌரவிக்கும் வகையில், இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 23-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘ராஜாஜி உஸ்தவ்’ என்ற பெயரில் விழா கொண்டாடப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தனது ‘மனதின் குரல்’ (Mann Ki Baat) நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேச நிர்மாணத்தில் ராஜாஜியின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஏஐ (AI) உச்சி மாநாட்டின் வெற்றியைச் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை எதிர்கால மனிதகுல மேம்பாட்டிற்கு எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த பாடத்தைக் கற்பித்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை குறித்தும் பேசிய பிரதமர், உலக அளவில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கத்தை விவரித்தார். கனடா கிரிக்கெட் அணியின் கேப்டன் உட்படப் பெரும்பாலான வீரர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள சண்டிகரைச் சேர்ந்த வீரர் குறித்தும் அவர் சிலாகித்துப் பேசினார்.
மேலும், கேரளாவில் உயிரிழந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான சம்பவத்தைப் பகிர்ந்த பிரதமர், இந்தியாவின் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முயற்சிகளில் அந்தக் குழந்தையின் தியாகம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று புகழாரம் சூட்டினார்.