மாசி அமாவாசை முன்னிட்டு மயான கொள்ளை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மாசி மாத அமாவாசையை ஒட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அங்காளம்மன் ஊர்வலமாக மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் உடலில் எலுமிச்சை பழங்களை குத்தியும், தெய்வங்களின் வேடங்களை அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வந்தவாசி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்.
அதேபோல், திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் மாசிமக அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை விழா இன்று அதிகாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஈசானிய மயானத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இதில் பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து வழிபாடு செய்தனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காளி வேடமணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.
அதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களிலும் மயான கொள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் காளி வேடமணிந்து, நகரின் பல்வேறு வீதிகளில் நடனமாடியபடி ஊர்வலமாகச் சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்தில் அமர்ந்த அங்காளம்மனை வழியெங்கும் பக்தர்கள் வழிபட்டனர்.