மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – 5 மாத குழந்தையுடன் 108 கி.மீ. நடந்த தம்பதி
மகா சிவராத்திரியை முன்னிட்டு, கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற ‘சிவாலய ஓட்டம்’ நிகழ்வில், 5 மாத கைக்குழந்தையுடன் பங்கேற்ற தம்பதி, சுமார் 108 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை ஓடி மற்றும் நடந்து தரிசிக்கும் ‘சிவாலய ஓட்டம்’ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், குட்டகுழி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் – அபிஷா தம்பதியின் பங்கேற்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், குழந்தை பிறந்தால் சிவாலய ஓட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்று 12 சிவாலயங்களையும் தரிசிப்பதாக அவர்கள் வேண்டுதல் வைத்திருந்தனர்.
வேண்டுதலின் பலனாக பெண் குழந்தை பிறந்து தற்போது 5 மாதங்கள் ஆன நிலையில், அந்தக் குழந்தையை சுமந்தபடி, 12 சிவாலயங்களையும் உள்ளடக்கிய சுமார் 108 கிலோமீட்டர் தூரத்தை தம்பதியினர் நடந்து சென்று தங்களின் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.
இவர்களின் பக்தியும் உறுதியும் பலரிடையே பாராட்டையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.