வங்கதேசத்தில் BJP ஒரு இடத்தில் வெற்றி – இணையத்தில் பரவும் தகவலுக்கு விளக்கம்
அண்டை நாடான வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் BJP என்ற பெயருடைய கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால், 299 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பிஎன்பி கட்சி 209 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆட்சியமைக்க 151 இடங்கள் போதுமான நிலையில், பிஎன்பி தெளிவான வெற்றியை பெற்றுள்ளது. விரைவில் தாரிக் ரஹ்மான் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
இதனிடையே, வங்கதேசத்தில் BJP கட்சி முதல் முறையாக வெற்றி பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதில் குறிப்பிடப்படும் BJP என்பது இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் ‘பங்களாதேஷ் ஜாதியா கட்சி’ என்ற கட்சி BJP என்ற சுருக்கப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்சி சார்பில் போலோ தொகுதியில் போட்டியிட்ட அந்தலீவ் ரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாகவே, வங்கதேசத்தில் BJP வெற்றி பெற்றதாக தவறான புரிதலுடன் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உறுதி செய்து பகிர்வது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.