ஒரு பவுன் ரூ.95,000-ஐ நெருங்கிய தங்க விலை – வியாபாரிகள் விளக்கம்!
சென்னையில் தங்க விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1,960 உயர்ந்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் ரூ.95,000 மார்க்கை நெருங்கியது.
சர்வதேச பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்க விலையில் ஏற்ற, இறக்கம் நிலவுவது வழக்கம். எனினும், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது. முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.92,640 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.1,960 உயர்வுடன் ரூ.94,600-க்கு சென்றது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.245 உயர்ந்து ரூ.11,825 ஆகியது.
24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,03,200 எனப் பதிவானது. இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத விலை உச்சத்தை எட்டியது.
வெள்ளி விலையும் தங்கத்துடன் இணைந்து உயர்வைக் கண்டுள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.206 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.9,000 உயர்ந்து ரூ.2,06,000 ஆக விற்பனை செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 30 அன்று ரூ.1,61,000 இருந்த வெள்ளி விலை, தற்போது 15 நாட்களில் ரூ.45,000 உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ். சாந்தகுமார் கூறியதாவது:
“சர்வதேச சந்தையில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமன்றி சிறிய முதலீட்டாளர்களும் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. இந்த போக்கின் அடிப்படையில் விரைவில் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைத் தொடும் வாய்ப்பு உள்ளது,” என்றார்.