ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு – பியூஷ் கோயல் உறுதி
திருப்பூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையினருடன் நடைபெற்ற சந்திப்பில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து தொழில்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் மற்றும் சவால்களை முன்வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியில் திருப்பூர் முக்கிய பங்காற்றி வருவதாக பாராட்டினார். மேலும், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA) வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்கும் இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும் எனவும் திருப்பூர் தொழில்துறையினருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
மத்திய அரசு தொழில்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.