அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
அமெரிக்கா தனது சொந்த நலனுக்காக பாகிஸ்தானை பயன்படுத்தி, தேவையற்றதாக நினைத்ததும் மிகவும் அவமதிப்பாக நடத்துகிறது என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்கா தன்னுடைய மூலோபாய இலக்குகளை நிறைவேற்ற பாகிஸ்தானை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். தேவைகள் பூர்த்தியானதும், மதிப்பில்லாத பொருளைப் போல பாகிஸ்தானை ஒதுக்கி விடுகிறது என்றும் அவர் கூறினார்.
1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தொடர்பான போர் சூழலில், அந்நாட்டின் அப்போதைய ராணுவ தலைமைகள் தலையிட்டதாகவும், அந்த நேரத்தில் அமெரிக்காவின் ஆதரவை நாடியது ஒரு பெரிய தவறாக அமைந்ததாகவும் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் இராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோரின் முடிவுகள் பாகிஸ்தானை வெளிநாட்டு மோதல்களில் ஈடுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தச் சூழ்நிலைகளில் நட்பு நாடுகள் பின்னடைந்தபோதும், அதன் விளைவுகளை இன்றளவும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.