இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உருவாகி வரும் வர்த்தக உடன்பாடு மூலம் கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தற்போது இறுதி கட்ட பேச்சுவார்த்தை நிலையை எட்டியுள்ளதாக கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் 30 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய சந்தை வாய்ப்பு திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு பெருமளவில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேலும் வலுப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய விவசாயிகளின் நலன், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் பியூஷ் கோயல் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.