இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு புதிய ஊக்கம் – பிரதமர் மோடி
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உருவாகியுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகின் இரண்டு முக்கிய நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஒரு கட்டமைப்பில் ஒப்பந்தம் செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா–அமெரிக்கா உறவுகளை மேம்படுத்துவதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டும் தனிப்பட்ட ஈடுபாட்டிற்கும், அர்ப்பணிப்பிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தக் கட்டமைப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வளர்ந்து வரும் நம்பிக்கையையும், செயலில் உள்ள கூட்டாண்மையையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் இந்தியாவின் உழைப்பாளியான விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், புதுமைகளை ஊக்குவிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே நோக்கைக் கொண்டுள்ளன என்றும், இந்த ஒப்பந்தக் கட்டமைப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீட்டு வாய்ப்புகளையும், தொழில்நுட்ப கூட்டாண்மைகளையும் மேலும் ஆழப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதேபோல், நெகிழ்வான மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் பங்களிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்