குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும்
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு மூன்று நாட்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் முடிவடைந்ததையடுத்து, வட்டி விகித முடிவுகளை ஆளுநர் வெளியிட்டார்.
அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் முன்புபோலவே 5.25 சதவீதமாக தொடரும் என அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாடும் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என அவர் கூறினார்.
அத்துடன், வரவிருக்கும் நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.