இஸ்லாமாபாத்தை பின்தள்ளிய டிரம்ப் – இந்தியா முன்னேற்றம்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான வர்த்தக உடன்பாடு, பாகிஸ்தானுக்கு பெரும் அரசியல்-பொருளாதார அதிர்ச்சியாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக, இஸ்லாமாபாத் உள்நாட்டில் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. அமெரிக்கா ஏன் பாகிஸ்தானை புறக்கணித்தது என்ற கேள்வி அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக மிரட்டல்களையும், ஒருதலைப்பட்ச அணுகுமுறையையும் ஏற்க மறுத்த இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் மாற்று வர்த்தக ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தியது. இதனால் இந்திய சந்தையை இழக்கும் அபாயத்தை உணர்ந்த அமெரிக்கா, இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத இறக்குமதி வரியை 18 சதவீதமாகக் குறைத்து, இருதரப்பு வர்த்தக உடன்பாட்டை இறுதிப்படுத்தியது.
இந்த ஒப்பந்தம், குறிப்பாக பாகிஸ்தானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தொடர்ந்து சந்தித்து நெருக்கம் காட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோருக்கு, இந்த ஒப்பந்தம் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது முதல், அவரை உலக அமைதியின் தூதராக புகழ்ந்தது வரை பாகிஸ்தான் வெளிப்படுத்திய நெருக்கத்தினிடையிலும், அந்த நாட்டுக்கு 19 சதவீத வரி விதிப்பு தொடர்கிறது.
இந்தியா–அமெரிக்கா உடன்பாடு பாகிஸ்தானுக்கு விழுந்த கடும் அடியாகவே உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் விமர்சிக்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக பாகிஸ்தானை அமெரிக்கா முக்கியத்துவம் இன்றி விலகி வைத்திருந்ததாகவும், அதே நேரத்தில் டிரம்பின் அழுத்தங்களை எதிர்கொண்ட இந்தியா, தன் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சாதகமான ஒப்பந்தத்தை பெற்றதாகவும் கருத்துகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், பிரதமர் மோடியுடன் தாம் இடம்பெற்றுள்ள இந்தியா டுடே இதழ் அட்டைப்படத்தை ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதளத்தில் பகிர்ந்து, இந்தியாவை நம்பகமான கூட்டாளி என குறிப்பிடினார். இந்த நிலையில், இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு 1 சதவீதம் கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகள் அமெரிக்க சந்தையில் கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹம்மத் அசார், இந்த வர்த்தக உடன்பாடு பாகிஸ்தானின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 21-ஆம் நூற்றாண்டின் வெளியுறவுக் கொள்கை என்பது தனிநபர் நட்புறவுகள் அல்ல, பொருளாதார வலிமை, வரி அமைப்பு மற்றும் சந்தை அணுகல் என்பவையே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியா மேற்கொண்ட சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்கள், வலுவான மற்றும் திட்டமிட்ட வெளியுறவுக் கொள்கையின் அடையாளம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா தன்னம்பிக்கையுடனும் சுயசார்பு அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அதேசமயம், பாகிஸ்தான் தலைமையகம் தனிப்பட்ட உறவுகளையே அதிகம் நம்பியதன் விளைவாக, இன்றைய பாதகமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் விமர்சிக்கின்றன. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.