ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நிலுவையில் உள்ள பில்களை பரிசீலித்து ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக கண்காணிப்பு பொறியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் குக்கட்பல்லி மண்டலத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் பொட்டுத்துரி சின்னா ரெட்டி என்பவரே கைது செய்யப்பட்ட நபர் ஆவார்.
ஒரு ஒப்பந்ததாரர் நிறைவு செய்த பணிகளுக்கான ரூ.1.40 கோடி மதிப்பிலான நிலுவை பில்களை சரிபார்த்து அனுமதி வழங்க, ரூ.30 லட்சம் லஞ்சமாக அவர் கோரியதாக கூறப்படுகிறது.
இதில் முதல் தவணையாக ரூ.15 லட்சத்தை, அவரது கணினி ஆபரேட்டர் மூலம் பெற்றுக் கொண்ட போது, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.