தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மனிதர் நிலவு பயணம் தற்காலிக நிறுத்தம்
மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் நோக்கில் நாசா மேற்கொண்டு வரும் ‘ஆர்டெமிஸ்-2’ விண்வெளித் திட்டம், ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, இந்த ராக்கெட் வரும் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் சோதனை நடத்தப்பட்டது.
அந்த சோதனை நடவடிக்கையின் போது, ராக்கெட்டின் கீழ்பகுதியில் ஹைட்ரஜன் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தொழில்நுட்ப குறைபாடுகளை முழுமையாக ஆய்வு செய்து சரிசெய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், ராக்கெட் ஏவுதல் மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, விண்வெளிப் பயணத்திற்காக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா வீரரும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து தொழில்நுட்ப ஆய்வுகள் முடிவடைந்த பின், புதிய ஏவுதல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.