ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் திருவிழா
மனிதர்களுக்கு ஜாதி, மதம் இருக்கலாம்; ஆனால் கடவுளுக்கு இதுபோல் வேறுபாடுகள் கிடையாது. இதையே திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் கைங்கர்யங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடக்க உள்ளது. தேரின் உச்சியில் சவர தொழிலாளர்கள் வழங்கும் தங்க குடை அமைக்கப்பட்டு, அதன் கீழ் உற்சவ மூர்த்திகள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கைங்கர்யங்களை கவனித்தால், ஜாதி, மதம் என்பது பெருமாளுக்கு பொருந்தாதது என்பதை நாம் தெளிவாக காண முடியும். பல ஆண்டுகளாக, சுப்ரபாத சேவைக்கு முன்னதாக கோயில் திறக்கும் போது முதல் தரிசனம் யாதவ குலத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதேபோல், இரவு நடைச் சாத்தப்படுவதற்கு முன், ஏகாந்த சேவையில் நாவிதரின் நாதஸ்வர இசை முடிந்த பின் பெருமாள் துயிலுறங்க செல்கிறார். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் நடத்தப்படும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில், குண்டூரை சேர்ந்த பக்தர் ஷேக் மஸ்தான் வழங்கிய 108 தங்க புஷ்பங்களுடன் 1984 முதல் இந்த ஆர்ஜித சேவை நடக்கிறது.
குயவர்கள் செய்யும் மண் சட்டியில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். பழங்குடி இனத்தவர்களின் குலதெய்வமாக கொண்டாடப்படும் ஹத்திராம் மடம், இன்று தினமும் சுப்ரபாத சேவையில் வெண்ணை மற்றும் பிரசாதங்களை நைவேத்தியமாக வழங்குகிறது. பல ஜாதிகள், பிரிவினர்கள் தொடர்ந்து காலமெல்லாம் திருப்பதி ஏழுமலையான் கைங்கர்யங்களில் பங்களித்து வருகின்றனர்.
இதேபோல், இன்று நடைபெற உள்ள தேர்த்திருவிழாவில், திருமலையில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பணியாற்றும் சவர தொழிலாளர்கள் வழங்கும் தங்க குடை தேரின் உச்சியில் வைக்கப்பட்டு ரதோற்சவம் நடைபெற உள்ளது.
சிறப்பு பூஜைகள்: சில ஆண்டுகளுக்கு முன்பாக மரக்கட்டையில் இந்த குடை வழங்கப்பட்டிருந்தது; ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தங்க குடைதே தேரின் உச்சியில் வைக்கப்படுகிறது. பந்துலுகாரி வம்சத்தினர், ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலத்தில் இருந்து தேருக்கு குடை வழங்கும் பாரம்பரியம் இன்று தொடர்கிறது. நேற்று மாலை தங்க குடைக்கு கல்யாண கட்டாவில் சிறப்பு பூஜை நடந்தது.
இதன்பின், சவர தொழிலாளர்கள் அந்த குடையை ஊர்வலமாகக் கொண்டு சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இன்று அந்த தங்க குடை தேரின் உச்சியில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.