சீன அதிபருடன் தொலைபேசி உரையாடல் – நல்லுறவை வலியுறுத்திய ட்ரம்ப்
சீனாவுடன் அமெரிக்கா நட்புறவை வலுப்படுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தையின் போது பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள், தைவான் தொடர்பான நிலை, ரஷ்யா–உக்ரைன் போர், ஈரான் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு மேற்கொள்ள உள்ள தனது பயணம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறியுள்ள ட்ரம்ப், அந்த பயணத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
சீனாவுடனும், குறிப்பாக ஜி ஜின்பிங்குடனும் தனது தனிப்பட்ட உறவு நல்ல நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த நட்பு தொடர்வது இரு நாடுகளுக்கும் எவ்வளவு அவசியம் என்பதைக் குறித்து இருவரும் ஒரே கருத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் சீனா தொடர்பாக பல சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.