இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: புதிய காலகட்டத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி
இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25 சதவீத வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 25 சதவீத இறக்குமதி வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், வர்த்தக அணுகுமுறை, புவியியல் அரசியல் தந்திரம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலக சந்தை அமைப்பில் பிரதமர் மோடி ஒரு புதிய யுகத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு பின்வருமாறு.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்திய பின்னர், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதே சமயம், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான வர்த்தக ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான வர்த்தக மதிப்பை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இந்தியா சம்மதித்துள்ளதாகவும், அதே நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டில் 212.3 பில்லியன் டாலராக இருந்த இந்தியா–அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம், 2025 ஆம் ஆண்டில் 230 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வர்த்தக மதிப்பை 500 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த பல நாடுகள் அதிக அளவிலான அமெரிக்க வரி விதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரி, உலகளாவிய சந்தை பொருளாதாரத்திலும் விநியோக சங்கிலிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டனுக்கு 10 சதவீதமும், ஐரோப்பிய யூனியன், சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு தலா 15 சதவீதமும் வரி விதித்துள்ளது. பிரேசிலுக்கு 50 சதவீதமும், தென்னாப்பிரிக்காவுக்கு 30 சதவீதமும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு 20 சதவீதமும், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு 19 சதவீதமும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், fentanyl போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் கூடுதல் வரி சுமைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், லாவோஸ் மற்றும் மியான்மருக்கும் அமெரிக்கா 40 சதவீத இறக்குமதி வரியை அமல்படுத்தியுள்ளது.
உற்பத்தி மற்றும் அவுட்சோர்சிங் துறைகளில் சீனாவை அதிகமாக சார்ந்திருந்த அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள், தற்போது “சைனா பிளஸ் ஒன்” என்ற தந்திரத்தின் அடிப்படையில், சீனாவுக்கு மாற்றாக இந்தியாவையே முன்னுரிமையாக தேர்வு செய்து வருகின்றன.
இந்த பின்னணியில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி, உலகளாவிய முதலீடுகளை இந்தியாவை நோக்கி ஈர்க்கும் என்றும், இந்திய தொழில் முனைவோருக்கு குறிப்பிடத்தக்க லாப வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த வரி குறைப்பு காரணமாக, இந்தியாவின் ஜவுளி, கடல் உணவு, வாகன உற்பத்தி மற்றும் ரசாயனத் துறைகள் பெரும் பயன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, லாப விகிதம் பொதுவாக 3 முதல் 5 சதவீதம் மட்டுமே இருக்கும் தொழிலாளர் அதிகம் தேவைப்படும் ஜவுளி, ஆயத்த ஆடை மற்றும் காலணி உற்பத்தித் துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் மிகுந்த ஆதரவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, இந்தத் துறைகளில் இந்தியாவுடன் போட்டியிட்டு வரும் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
கடந்த ஆண்டில் நியூசிலாந்து, ஓமன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத்திட்ட இந்தியா, இந்த ஆண்டில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.