இந்தியா – அமெரிக்கா வர்த்தக உடன்பாடு: இலக்கை எட்டிய பிரதமர் மோடி
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரியை 18 சதவீதமாகக் குறைக்க உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார். முதலில் கடுமையான வரி விதிப்புகளை அறிவித்து பின்னர் அதிலிருந்து பின்னடைந்து, இந்தியாவுக்கு விதித்த வரியை குறைத்ததும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ததும் உலக நாடுகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பு இது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்ற உடனே, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரை ட்ரம்ப் தொடங்கினார். பரஸ்பர வரி விதிப்பு என்ற கொள்கையை முன்வைத்து, உலக நாடுகளை அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வர வற்புறுத்தினார். இதன் தொடர்ச்சியாக, இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக கலந்துரையாடல்களின் ஆரம்ப பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், கடந்த டிசம்பர் மாதத்துக்குள் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இரு தலைவர்களும் இணக்கமாக முடிவு செய்தனர். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தக மதிப்பை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஆனால், இந்தியாவின் உயர்ந்த வரி விகிதங்கள் மற்றும் பால் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் தொடர்பான பிரச்னைகள் காரணமாக அமெரிக்கா அதிருப்தி அடைந்ததால் பேச்சுவார்த்தைகள் தடைபட்டன.
இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 2-ந் தேதி “விடுதலை நாள்” என்ற பெயரில் புதிய வரி திட்டத்தை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன் மூலம், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதே சமயம், வர்த்தக உடன்பாடு எட்டுவதற்கான வாய்ப்பை கருத்தில் கொண்டு, இந்த வரி 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 16-ந் தேதி இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் மூலம், முறையான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான கட்டமைப்பு விதிமுறைகள் இருநாடுகளும் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இரண்டு மாதங்களாக நடைபெற்ற பல சுற்று கலந்துரையாடல்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனிடையே, கடந்த ஜூலை 31-ந் தேதி இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தாவிட்டால் மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது மேலும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்ட ஒரே நாடாக இந்தியா மாறியது.
பின்னர் கடந்த டிசம்பர் மாதம், அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் பேசியதைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் உயிர் பெற்றன. ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர், ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக அறிவித்தார்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 2-ந் தேதி எதிர்பாராத திருப்பமாக, இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர இறக்குமதி வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பு வெளியானது. மேலும், இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு பெரும் ஊக்கமாக அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகின் இரண்டு முக்கியமான ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படுவது, உலக பொருளாதாரத்திற்கே பயன் அளிக்கும் என்றும் அவர் கூறினார். சாத்தியமற்றது என பலர் கருதிய இந்த இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை, தனது உறுதியான முயற்சியால் நனவாக்கியுள்ளார் பிரதமர் மோடி என புவியியல் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.