நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்
நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி சென்னையில் நேற்று காலமானார். அவர் வயது 60. மனோரமா நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் சுமார் ஆயிரம் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் எஸ்.எம். ராமநாதனுடன் 1964-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் பிரிந்தனர்.
அவர்களின் ஒரே மகன் பூபதி. திரையுலகில் அறிமுகம் செய்து பிரபலமாக்க மனோரமா தீவிர முயற்சி செய்தார். விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி, சில படங்களில் தொடர்ந்து நடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருந்தார், ஆனால் பெரிய அளவில் புகழ் பெறவில்லை.
சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த பூபதி, திடீர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது இல்லத்தில் உடலை வைக்கப்பட்டிருந்த போது திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
பூபதிக்கு மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜராஜன் மற்றும் அபிராமி, மீனாட்சி ஆகிய மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.