ஒடிசாவில் ராம்ஜெட் இயக்கப்படும் ஏவுகணை சோதனை வெற்றி – தொலைதூர போர் விமானங்களை துல்லியமாக குறிவைக்கும் திறன்
வான்வழி தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், திட எரிபொருள் குழாய் இணைக்கப்பட்ட ராம்ஜெட் என்ஜின் கொண்ட ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை மிகுந்த துல்லியத்துடன் தாக்கும் ஏவுகணைகள் உருவாக்கத்தில், SFDR (Solid Fuel Ducted Ramjet) என்ஜின் தொழில்நுட்பம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் ஏவுகணைகளை இயக்கும் திறனை வழங்குகிறது. அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட SFDR என்ஜின் ஏவுகணை, சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை வளாகத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையின் மூலம், நீண்ட தூரத்தில் பறக்கும் எதிரி போர் விமானங்களை இனி மிகச் சரியாக தாக்கும் திறன் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பெருமையுடன் தெரிவித்துள்ளது.