இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் ஏற்றுமதி வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அந்த நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ‘ஒப்பந்தங்களின் அரசி’ என அழைக்கப்படும் இந்த இந்தியா–ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், 2027 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தில் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது. இரு தரப்புக்கும் வர்த்தக பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் ஜவுளித் துறை 172 பில்லியன் டாலரிலிருந்து 350 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி அடையும் என்றும், ஜவுளி ஏற்றுமதி 37 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ஆயத்த ஆடைகள் தேவை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளது. இருப்பினும், இதில் 105 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே தயாரிக்கப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை இறக்குமதிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் கொண்டுள்ளன. ஆசியாவுக்கு வெளியே பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய யூனியன் விளங்குகிறது. பாகிஸ்தானிலிருந்து அதிகமாக ஜவுளி மற்றும் ஆடைகளையே ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்து வருகிறது.
2014 ஆம் ஆண்டிலிருந்து, பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ‘ஜிஎஸ்பி பிளஸ்’ அந்தஸ்தை வழங்கி வருகிறது. இதன் மூலம், பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 85 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் மொத்த வர்த்தகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு 12.4 சதவீதமாக இருந்தது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 48-வது பெரிய வர்த்தக நாடாக பாகிஸ்தான் திகழ்கிறது.
இதுபோல, ‘ஆயுதங்கள் தவிர அனைத்தும்’ (EBA) என்ற திட்டத்தின் கீழ், குறைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி வங்கதேசமும் ஐரோப்பிய யூனியனுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 36-வது முக்கிய வர்த்தக நாடாக வங்கதேசம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதி செய்யும் மொத்த பொருட்களில் சுமார் 94 சதவீதம் வங்கதேசத்திலிருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள், கடந்த காலங்களில் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களுக்கு ‘மிகவும் விரும்பப்படும் நாடு’ என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்பட்டன. உதாரணமாக, ஜவுளி பொருட்களுக்கு 12 சதவீதமும், கடல் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களுக்கு 26 சதவீதமும் வரியாக வசூலிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா–ஐரோப்பிய யூனியன் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 90 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்பதாவது பெரிய வர்த்தக நாடாக இந்தியா மாறி, 120 பில்லியன் யூரோ மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 11.5 சதவீதமாகும்.
இந்த சூழலில், இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன், இந்தியாவின் 99 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றுமதி பொருட்கள் சிறப்பு சலுகைகளுடன் ஐரோப்பிய சந்தைகளில் நுழையவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, தற்போதைய 7 பில்லியன் டாலராக உள்ள இந்திய ஏற்றுமதி, 40 பில்லியன் டாலராக உயர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆண்டுதோறும் 25 சதவீத வளர்ச்சி காணும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளையே நம்பியுள்ள பாகிஸ்தானின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானை விட வங்கதேசத்தின் நிலை இன்னும் மோசமானதாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் குறைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை வங்கதேசம் இழந்த நிலையில், எதிர்காலத்தில் ஐரோப்பிய யூனியன் சந்தையிலிருந்து அது முழுமையாக விலக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா–ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் ஏற்றுமதியாளர்களை மட்டுமல்லாது, அந்த நாடுகளின் அரசுகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.