மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்
மக்களவையில் நடைபெற்ற கடும் குழப்பம் காரணமாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் தற்போதைய கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திங்கள்கிழமை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய நூலில் இடம்பெற்றுள்ள தகவல்களை மேற்கோள் காட்டி, இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, விவாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட தலைப்பில் இந்தியா அல்லது சீனா தொடர்பான விவகாரங்கள் இடம்பெறவில்லை என தெரிவித்தார். மேலும், பட்டியலிட்ட தலைப்புக்குள் மட்டுமே பேச வேண்டும் என ராகுல் காந்திக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, எதிர்க்கட்சியினரின் கூச்சல் மற்றும் குழப்பம் அதிகரித்ததால், மக்களவை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் அவை மீண்டும் கூடியபோது, ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் அவைத் தலைவர் இருக்கையை நோக்கி காகிதங்களை கிழித்து எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மக்களவையின் ஒழுங்குகளை மீறி நடந்துகொண்டதாகக் கூறி, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு 374-வது விதியின் கீழ் 8 எம்பிக்களை இந்த அமர்விலிருந்து இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.