அண்டை நாடுகளுக்கான இந்தியாவின் நிதியுதவி உயர்வு – நடப்பு ஆண்டில் முக்கிய மாற்றங்கள்
இந்தியாவின் வெளிநாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும், ஆப்கானிஸ்தான், மங்கோலியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கான நிதியுதவியை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளுக்கான வளர்ச்சி மற்றும் உதவி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தனது 9-வது நிதிநிலை அறிக்கையிலும், பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கான மொத்த நிதியுதவி ரூ.5,686 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், பூட்டானுக்கு அதிகபட்சமாக ரூ.2,289 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு ரூ.800 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாலத்தீவுக்கான நிதியுதவி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.550 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.150 கோடியும், மியான்மருக்கு ரூ.300 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்காக ரூ.225 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட இருமடங்காக உயர்த்தப்பட்டு ரூ.120 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்கதேசத்திற்கான நிதியுதவி ஒதுக்கீட்டில் மத்திய அரசு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் மற்றும் இருநாட்டு உறவுகளை கருத்தில் கொண்டு, வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு ரூ.120 கோடி நிதியுதவி தற்போது பாதியாக குறைக்கப்பட்டு ரூ.60 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.