உக்ரைனில் பேருந்தை குறிவைத்த டிரோன் தாக்குதல் – 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உக்ரைனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ரஷ்யா மேற்கொண்ட டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போர் தற்போது நான்காவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு சமாதான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
ஆனால், அந்த முயற்சிகளுக்கு மத்தியில் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் டினிப்ரோ பிராந்தியத்தில் சுரங்கங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், பணி முடிந்து பேருந்தில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பேருந்தை குறிவைத்து ரஷ்யா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலின் விளைவாக பேருந்து தீப்பிடித்து சேதமடைந்ததில், 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த 7 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.