திருச்செந்தூரில் வரலாறு படைக்கும் பக்தர் பெருக்கம் – தைப்பூச விழாவில் அலைமோதும் கூட்டம்
தைப்பூச பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இதுவரை காணாத அளவிற்கு பக்தர்கள் பெருந்திரளாக திரண்டனர்.
தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனமும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன.
அதன்பின் தினசரி கால பூஜைகள் முறையாக நடத்தப்பட்டன. தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, சுமார் 7 மணி நேரம் காத்திருந்து இறைவன் தரிசனம் செய்தனர்.
பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில், கைகளில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு தனி வரிசை மூலம் அனுமதிக்கப்பட்டனர்.
3 அடி முதல் 22 அடி உயரம் வரை அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், திருச்செந்தூர் நகரமே விழாக்கோலத்தில் மிளிர்கிறது.