தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள்
தைப்பூச பண்டிகையை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று இறைவன் தரிசனம் செய்தனர்.
தைப்பூச தினத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்த முருகப்பெருமானை, நள்ளிரவு முதலே காத்திருந்த பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்தனர். 48 நாட்கள் விரதம் கடைப்பிடித்து, பால்குடம் சுமந்தும், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் வந்த பக்தர்கள் தனிப்பட்ட வரிசை மூலம் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
வடபழனி முருகன் கோயிலில் இதுவரை காணாத அளவுக்கு பக்தர்கள் திரண்டதால், 100 அடி சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியது. போக்குவரத்து இடையூறுகள் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்