தைப்பூச விழா – திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
தைப்பூச பண்டிகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். முருகப்பெருமானின் ஐந்தாவது படைவீடாக போற்றப்படும் இந்த திருத்தணி கோயிலில், தைப்பூச தினத்தை ஒட்டி அதிகாலை மூலவருக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
பின்னர், சந்தன அலங்காரம், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், திருச்சி மாவட்டம் வயலூரில் அமைந்துள்ள முருகன் கோயிலிலும் தைப்பூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை கோயில் கதவுகள் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை முதலே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஆழ்ந்த பக்தியுடன் தரிசனம் செய்தனர். பலர் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் வந்து தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தைப்பூச தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சென்னிமலை கோயிலின் தைப்பூச தேர்விழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது.
அதன் பின்னர் தினமும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலை முருகப்பெருமான் மற்றும் வள்ளி–தெய்வானை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வள்ளி மற்றும் தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தேரில் எழுந்தருளினார். அப்போது, பெருந்திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்தில் பங்கேற்றனர்.