பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கல் கட்டாயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு, இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தை, நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஜெயா தாக்கூர் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணை போது, வாழ்வதற்கான உரிமை என்பது மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களது உடல் சுகாதாரத்தை பாதுகாப்பதையும் உள்ளடக்கியது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் உயிர்ச்சூழலுக்கு ஏற்ற மட்கக்கூடிய சானிட்டரி நாப்கின்களை மாணவிகளுக்கு இலவசமாக வழங்குவது அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனிப்பட்ட கழிப்பறைகள் கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. மாணவிகளுக்கான தனி கழிவறை வசதிகளை ஏற்படுத்தத் தவறுவது, கல்வி பெறும் உரிமைக்கு எதிரான செயல் எனவும் குறிப்பிடப்பட்டது.
கல்வி நிறுவனங்கள், கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 19ன் கீழ், மாணவிகளின் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்திட்டங்களின் செயல்பாடு தொடர்பான விரிவான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.