மேகாலயா வாழும் வேர் பாலங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கோரி இந்தியா பரிந்துரை
மேகாலயா மாநிலத்தில் உள்ள வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக அறிவிக்க இந்தியா அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேகாலயா, அடர்ந்த காடுகளும் கனமழையும் நிறைந்த பகுதியாகும். தொடர்ச்சியான கனமழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவதால், அங்கு கான்கிரீட் சாலைகள் அல்லது இரும்பு பாலங்களை அமைப்பது சவாலானதாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், காசி மற்றும் ஜெயந்தியா மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி சமூகங்கள், இயற்கையை அடிப்படையாகக் கொண்டு பயண வசதிகளை உருவாக்கியுள்ளனர். அவர்கள் பிகஸ் ரப்பர் மரங்களின் நீளமான வேர்களை பயன்படுத்தி, ஆறுகள் மற்றும் நீரோடைகளை கடக்க பாலங்களை அமைக்கின்றனர்.
ஆற்றின் இரு கரைகளிலும் வளரும் ரப்பர் மரங்களின் வேர்களை, மூங்கில் கம்பிகளின் உதவியுடன் ஒன்றோடொன்று இணைத்து இந்த உயிருள்ள பாலங்கள் உருவாக்கப்படுகின்றன.
பருவமழை காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீர்நிலைகளை பாதுகாப்பாக கடக்க இந்த வேர் பாலங்கள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவுகின்றன.
நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் இந்த உயிருள்ள கட்டுமானங்கள், மனிதன் மற்றும் இயற்கை இடையிலான ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் நட்பை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கருதப்படுகின்றன.
இந்த வாழும் வேர் பாலங்களை 2026–27 ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கும் நோக்கில், இந்திய அரசு தேவையான பரிந்துரை ஆவணங்களை பிரான்ஸ் நாட்டின் பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.