டாலர் மதிப்பு சரிந்து வருகிறது; ட்ரம்ப் பதில் எச்சரிக்கை விடுத்தார் – இந்தியா தங்கத்தை குவித்து பாதுகாக்கிறது
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வரும் சூழலில், இந்தியா தன் தங்கச் சேமிப்பை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனைப் பற்றிய செய்தி தொகுப்பு இதோ.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற உடனே, டாலரின் மதிப்பு 9 சதவீதம் சரிந்து, குறிப்பாக யூரோவுக்கு எதிராக 13.5 சதவீதம், சுவிஸ் பிராங்க் மீது 13.9 சதவீதம் மற்றும் ஜப்பான் யென் எதிராக 6.4 சதவீதம் குறைந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது.
நீண்டகாலமாக உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டாலர் முதன்மையான நாணயமாக இருந்து வந்தது. இதன் செல்வாக்கால் பிற நாடுகள் மீதும், அவர்களது வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலும் அமெரிக்கா பிரதான தாக்கத்தை செலுத்தி வந்தது.
சமீப காலமாக, உலக நாடுகள் அமெரிக்க டாலரின் மீது சார்ந்திருப்பதை குறைத்து, தங்களது மத்திய வங்கிகளை புவிசார் மற்றும் பொருளாதார அபாயங்களிலிருந்து பாதுகாக்க முயற்சித்துள்ளன. இப்போது, டாலர் மதிப்பு சரிந்த பின்னர் இந்தியா உட்பட பல நாடுகள் டாலரில் இருந்து விலகி தங்கம் மற்றும் பிற பாதுகாப்பான சொத்துக்களை வாங்கத் தொடங்கியுள்ளன.
2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யா, தன் தேசிய கருவூலத்தில் இருந்து அமெரிக்க டாலரை முற்றிலுமாக நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் அமெரிக்க பொருளாதார தடைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைத்தது.
ஏற்கெனவே சீனா, முன்னணி எண்ணெய் இறக்குமதியாளர், பெட்ரோ டாலரை விலக்கி பெட்ரோ யுவான் நாணயத்தை உலக சந்தையில் பயன்படுத்தி வருகிறது. இதனால் பெட்ரோ டாலரின் மதிப்புக்கு பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனா மற்றும் சவூதி அரேபியா அமெரிக்க கருவூல பத்திரங்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். சவூதி அரேபியா, இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பத்திரங்களை முதன்மையாக விற்றுள்ளது. இந்தியா கடந்த நவம்பரில் 234 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கருவூல் பத்திரங்களை 186.5 பில்லியன் டாலராக குறைத்துள்ளது.
டாலர் சரிவைத் தொடர்ந்து, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வெளிநாட்டு மையச் சேமிப்பில் தங்கத்தை வாங்கி குவித்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி போலந்து 95 டன், கஜகஸ்தான் 49 டன், பிரேசில் 43 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அந்நியச் செலாவணி கையிருப்பை கடந்த பத்து மாதங்களில் 14 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு, ரிசர்வ் வங்கியின் 880 டன் தங்கச் சேமிப்பிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவின் அந்நியச் செலாவணி 5 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்த போதும், மொத்த கையிருப்பு 12 சதவீதம் உயர்ந்துள்ளது. அதில் தங்கத்தின் பங்கு 70 சதவீதமாக உள்ளது.
மேலும், எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் சுற்றுலா பண பரிமாற்றங்களை எளிதாக்க, பிரிக்ஸ் நாடுகள் தங்கள் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்த வேண்டும் என இந்தியா முன்மொழிந்துள்ளது. இந்தியாவின் தலைமையில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், முதன்முறையாக அனைத்து பிரிக்ஸ் உறுப்புநாடுகள் தங்கள் மத்திய வங்கித் டிஜிட்டல் நாணயங்களை இணைப்பது குறித்து பரிசீலிக்க உள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக அந்நியச் செலாவணி மையங்களில் அமெரிக்க டாலரின் பங்கு 2024-ல் 58.5 சதவீதம் குறைந்துள்ளது; இது 1999-ல் 71 சதவீதம் இருந்ததைவிடக் குறைவாகும்.
சர்வதேச வல்லுநர்கள் தெரிவிப்பதாவது, உலக நாடுகள் டாலரில் இருந்து விலகுவது அமெரிக்காவில் கடும் பணவீக்கத்தை உண்டாக்கி, சமூக மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதாகும்.