விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு மீண்டும் தடங்கல் – சென்னை உயர் நீதிமன்றம் புதிய தீர்ப்பு
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வர இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்று கிடைக்காத காரணத்தால் வெளியீடு தாமதமானது. இதனைத் தொடர்ந்து, படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், திரைப்படத்தில் ராணுவ சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளதால், படத்தை மீண்டும் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சென்சார் போர்டுக்கு உரிய பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டனர்.
அதே நேரத்தில், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தயாரிப்பு நிறுவனம் தங்களது கோரிக்கைகளை திருத்தி மீண்டும் மனுத் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.