கர்நாடக டிஜிபி ஏன் இடைநீக்கம்? – பெண்களுடன் தகாத நடத்தை குறித்த வீடியோக்கள் பரபரப்பு
கர்நாடகாவில் பணிக்காலத்தில் இளம்பெண்களுடன் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக வெளியாகிய ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ராமச்சந்திர ராவை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
59 வயதான ராமச்சந்திர ராவ், கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) பணியாற்றி வந்தார். இவர், கடந்த ஆண்டு தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ரன்யா ராவின் தந்தை ஆவார்.
ரன்யா ராவ், நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த ‘வாகா’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அவருடைய தங்க கடத்தல் விவகாரத்தில், ராமச்சந்திர ராவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன. இதன் காரணமாக கடந்த ஆண்டு அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். பின்னர் சமீபத்தில் மீண்டும் சிவில் உரிமைகள் அமலாக்கத் துறையின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அதிகாரப்பூர்வ அலுவலகம் போன்ற சூழலில், பணிநேரத்தில் காவல் துறை சீருடையில் இருந்தபடி, பெண்களை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
1993ஆம் ஆண்டு கர்நாடகப் பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியைத் தொடங்கிய ராமச்சந்திர ராவ், 2014ஆம் ஆண்டு தெற்கு மண்டல காவல்துறை தலைவராக இருந்த போது கூட பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தார்.
ஓய்வு பெற இன்னும் சுமார் 120 நாட்களே இருக்கும் நிலையில், இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, இந்த வீடியோக்கள் 2017ஆம் ஆண்டு பெலகாவியில் வடக்கு ரேஞ்சின் காவல் துறைத் தலைவராக அவர் இருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டவை என கூறப்படுகிறது.
வெவ்வேறு நாட்களில் பல பெண்கள் டிஜிபி அலுவலகத்திற்குள் வருவதையும், ஒவ்வொரு முறையும் வேறு வேறு உடைகளில் அவர்கள் தோன்றுவதையும், ராமச்சந்திர ராவ் அவர்களை முத்தமிடும் காட்சிகளையும் அந்த வீடியோக்கள் வெளிப்படுத்துகின்றன.
காவல் துறை சீருடையில் இருந்தபோது இவ்வாறு நடந்து கொண்டது, அவரது ஒழுக்கம், அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு மற்றும் அரசு வளாகத்தை பயன்படுத்திய விதம் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மூத்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ். சுரேஷ் குமார், இந்த சம்பவத்தை மிகவும் அவமானகரமானதும் மன்னிக்க முடியாததுமான செயலாக விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியருக்குப் பொருந்தாத நடத்தையால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, கர்நாடக அரசு ராமச்சந்திர ராவை இடைநீக்கம் செய்துள்ளது. இடைநீக்க காலத்தில், மாநில அரசின் எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி தலைமையகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வீடியோக்கள் குறித்து திங்கள்கிழமைதான் தகவல் கிடைத்ததாக கூறிய முதலமைச்சர் சித்தராமையா, “ஒரு காவல் அதிகாரி எவ்வளவு மூத்தவராக இருந்தாலும், குற்றச்சாட்டு உண்மையென நிரூபித்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.