அரியலூர் கோதண்டராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு
அரியலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில், 82 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சமும், பொதுமக்கள் நிதியாக ரூ.3.10 லட்சமும், மொத்தம் ரூ.18.60 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. அதனை அடுத்து தேரோட்டம் நடத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
விழா கடந்த செப்டம்பர் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அக்டோபர் 2ம் தேதி காலை நடைபெற்றது.
தேரோட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எம்எல்ஏ சின்னப்பா உள்ளிட்டோர் பொதுமக்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரில் ஆண்டாள், அலமேலுமங்கை உடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தார். தேரோட்டம் தேரடி பகுதியிலிருந்து புறப்பட்டு, மாதா கோயில் மற்றும் சத்திரம் வழியாகச் சென்று மீண்டும் தேரடியில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் சதீஷ்குமார், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.