பயங்கரவாதிகளின் அராஜக தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர்த் தியாகம்
ஜம்மு–காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையின் போது, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் தேசத்திற்காக தனது உயிரை ஈந்தார்.
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்க்புரா அடர்ந்த காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ராணுவம் மற்றும் மாநில காவல்துறைக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், “ஆபரேஷன் டிராஷி ஒன்” எனப் பெயரிடப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கினர்.
தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது, உயரமான மலைச்சரிவுகளில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர்மீது கையெறி குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில், 8 ராணுவ வீரர்கள் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரான சிறப்புப் படை ஹவில்தார் கஜேந்திர சிங், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி வீர மரணத்தை அடைந்தார்.
இந்த வீரனின் தியாகத்திற்கு ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கலையும், மரியாதை செலுத்தியும் வீரவணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை கைது செய்யும் நோக்கில், அந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.