காபூலில் சீன உணவகத்திற்கு அருகே பயங்கர வெடிப்பு – 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் ஷார்-இ-நாவ் பகுதியில் அமைந்துள்ள சீன உணவகத்தின் அருகே, பிற்பகல் நேரத்தில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகை பரவியதுடன், சம்பந்தப்பட்ட உணவக கட்டடம் மட்டுமல்லாது, அருகிலுள்ள பல கட்டடங்களும் பெரிதும் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்புப் பணியாளர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உணவகத்தில் பணியாற்றியவர்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்துக்குப் பின்னர் அந்த இடத்தை தாலிபான் பாதுகாப்புப் படைகள் முற்றுகையிட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளதுடன், வெடிப்பின் காரணம் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.