வரி மிரட்டலுக்கு ஐரோப்பாவின் பதிலடி?
கிரீன்லாந்தை கைப்பற்ற முயலும் ட்ரம்புக்கு எதிராக உயரும் எதிர்ப்பு – சிறப்பு செய்தி தொகுப்பு
கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்துள்ள எட்டு ஐரோப்பிய நாடுகள்மீது, வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த வரி மிரட்டலுக்கு ஐரோப்பா எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக பல அமெரிக்க அதிபர்கள் கிரீன்லாந்தை கைப்பற்ற முயன்றாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. ட்ரம்ப் முதன்முறையாக அதிபராக பதவியேற்றதும், 2019ஆம் ஆண்டு கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு அவசியம் என வெளிப்படையாக அறிவித்தார்.
ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது, கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ட்ரம்பின் அழுத்தம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க்கின் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பிரதேசமாக உள்ளது.
கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வரவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா அந்த தீவை கைப்பற்றும் அபாயம் இருப்பதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், இரண்டு நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளால் மட்டுமே டென்மார்க் கிரீன்லாந்தை பாதுகாக்க முயல்கிறது எனவும் அவர் கேலி செய்துள்ளார்.
அத்துடன், டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக எந்தவித வரியும் வசூலிக்காமல் மானியங்களை வழங்கி வந்ததாக கூறிய ட்ரம்ப், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்போது அமெரிக்காவுக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக குரல் கொடுத்த டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய எட்டு ஐரோப்பிய நாடுகள்மீது, முதற்கட்டமாக 10 சதவீதமும், அதன் பின்னர் 25 சதவீதமும் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்த நாடுகள், டென்மார்க்கும் கிரீன்லாந்து மக்களும் உடன் இருப்பதாகவும், ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், கிரீன்லாந்து விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளன.
இதனிடையே, ட்ரம்பின் வரி நடவடிக்கையை கண்டித்து, கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு முறையான ஒப்புதல் வழங்குவதை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரும் வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ள அவசர உச்சி மாநாட்டில், அமெரிக்கா மீது 107.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வரிகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரி நடவடிக்கைகள் பிப்ரவரி 6ஆம் தேதி தானாகவே அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு, கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், கிரீன்லாந்து மக்கள் ட்ரம்புக்கு எதிராக பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். “அமெரிக்கா விலகிச் செல்லட்டும்” என்ற முழக்கங்கள் அங்கு எதிரொலித்தன.
இதற்கிடையே, வரும் புதன்கிழமை சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மன்றத்தில், உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களை ட்ரம்ப் சந்திக்க உள்ளார். இந்த நேரடி சந்திப்பில் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தத்திற்கு அவர் பணிவாரா? கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்தை கைவிடுவாரா? என்பதற்கான பதில் விரைவில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.