“வெனிசுலாவின் உண்மையான அதிபர் நான் தான்” – அதிகார துஷ்பிரயோகத்தில் டிரம்ப்; உலக நாடுகளில் அதிர்ச்சியும் கண்டனமும்
வெனிசுலாவின் உண்மையான அதிபர் தாமே என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக அறிவித்திருப்பது, உலக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கியூபாவின் அரசியலிலும் தலையிடும் போக்கை வெளிப்படையாக காட்டியுள்ள டிரம்பின் இந்த அடாவடி அறிவிப்புகள், பலவீனமான நாடுகள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வெனிசுலாவில் அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கை
வெனிசுலா மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ தலையீட்டு நடவடிக்கையின் மூலம், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, வெனிசுலாவின் மிக முக்கியமான எண்ணெய் வளங்கள் அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வெளிப்படையான அத்துமீறலுக்கு சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் அடுத்த கட்ட அரசியல் ஆட்டத்தை டிரம்ப் தொடங்கியுள்ளார்.
கியூபாவை குறிவைக்கும் டிரம்ப் – எரிசக்தி ஆயுதம்
வெனிசுலா அதிபர் கைது நடவடிக்கைக்கு பிறகு, அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கியூபாவின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 50 சதவிகிதம் வெனிசுலாவால் பூர்த்தி செய்யப்பட்டு வந்த நிலையில், அமெரிக்க ராணுவ நடவடிக்கையால் அந்த எரிசக்தி விநியோக சங்கிலி துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டிய டிரம்ப்,
“அமெரிக்காவுடன் கியூபா உடன்பாடு செய்யாவிட்டால், எந்த தலையீடும் இல்லாமலேயே கியூபா தானாகவே வீழ்ந்து விடும்”
என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விரைவில் கியூபா மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என அவர் கூறியிருப்பது உலக நாடுகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
“கியூபாவின் அதிபராக மார்கோ ரூபியோ?” – டிரம்பின் ஆமோதம்
அமெரிக்கா கியூபாவை கைப்பற்றினால், அதிபராக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நியமிக்கப்படுவாரா? என நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விக்கு,
“அது நல்ல யோசனை” என டிரம்ப் ஆமோதித்திருப்பது, கியூபா அரசை ஆத்திரமடையச் செய்துள்ளது.
வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் பண உதவிகளை பெற்று வந்த கியூபா, வெனிசுலாவின் “கடைசி இரண்டு சர்வாதிகாரிகளுக்கு” பாதுகாப்பு சேவைகள் வழங்கியதாகவும், இனி அதற்கு அவசியமே இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும்,
“உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவம் இப்போது வெனிசுலாவிடம் உள்ளது. இனி கியூபாவுக்கு எண்ணெயோ, பணமோ செல்லாது”
எனவும் டிரம்ப் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
கியூபாவின் கடும் மறுப்பு – “அமெரிக்கா போல அல்ல”
டிரம்பின் இந்த கருத்துகளுக்கு கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ் கடுமையான பதிலடி அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
- கியூபா, பிற நாடுகளுக்கு வழங்கிய பாதுகாப்பு சேவைகளுக்காக எந்த பணமோ, பொருளோ பெறவில்லை
- அமெரிக்கா போல கூலிப்படைகள், மிரட்டல் அல்லது ராணுவ வற்புறுத்தலை கியூபா நம்பியதில்லை
- தங்கள் தேச உரிமையை காப்பதற்காக கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம்
என தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருளை ஏற்றுமதி செய்யும் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்யும் உரிமை கியூபாவுக்கு உண்டு, அதில் அமெரிக்காவின் தலையீடு தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்வினை
இதற்கிடையில், கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போக்கை எதிர்க்க லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் சேவகர்களாக மாறாமல், சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்பின் படம் இடம்பெற்ற அறிவிப்பு – புதிய சர்ச்சை
இந்த சூழலில், வெனிசுலாவின் செயல் அதிபர் ஜனவரி 2026-ல் பதவியேற்பார் என்ற அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ புகைப்படம் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்தப் படத்தில், டிரம்ப் அமெரிக்காவின் 45 மற்றும் 47வது அதிபராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மதுரோவின் நீக்கத்திற்குப் பிறகு, வெனிசுலாவின் துணைத் தலைவரும், பெட்ரோலிய அமைச்சருமான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபரே வெனிசுலாவின் செயல் அதிபராக செயல்படுவதாக பரவும் தகவல்கள் புவிசார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அமைதிக்கு அச்சுறுத்தலா டிரம்ப்?
பலவீனமான நாடுகளின் மீது அதிகார துஷ்பிரயோகம், ராணுவ மிரட்டல், அரசியல் தலையீடு ஆகியவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் டிரம்பின் நடவடிக்கைகள் உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவின் இந்த அடாவடி அணுகுமுறை, உலக அரசியல் சமநிலையை சீர்குலைக்கும் அபாயம் கொண்டதாக தற்போது கருதப்படுகிறது.