ரபாடா – செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்கா 404 ரன்கள் குவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி விக்கெட் ஜோடி ரபாடா – செனுரன் முத்துசாமி இணைந்து அபாரமாக விளையாடி அணியை 400 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது.
ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தொடங்கியது. 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்களுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெர்ரெய்ன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாவது நாள் தொடங்கியதும், கைல் வெர்ரெய்ன் (10) விரைவில் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்டப்ஸ் (76), ஹார்மர் (2), யான்சன் (12), கேசவ் மகாராஜ் (30) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர்.
306 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இழந்த நிலையில், செனுரன் முத்துசாமியுடன் இணைந்த ரபாடா அதிரடி ஆட்டம் ஆடினார். இருவரும் கடைசி விக்கெட்டுக்காக 98 ரன்கள் சேர்த்து அணிக்கு உறுதியான ஸ்கோரை வழங்கினர்.
ரபாடா 61 பந்துகளில் 4 சிக்ஸரும், 4 பவுண்டரியும் அடித்து 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். செனுரன் முத்துசாமி 155 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 119.3 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணிக்காக 38 வயது அறிமுக வீரர் ஆசிப் அப்ரிடி அசத்தி 6 விக்கெட்கள் எடுத்தார். இதன் மூலம் 37 வயதை கடந்த அறிமுக வீரராக அதிக விக்கெட்கள் எடுத்த சாதனையை இவர் படைத்தார். இதற்கு முன் 1933-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சார்லஸ் மரியோட் 5 விக்கெட்கள் எடுத்திருந்தார்.
71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் 35 ஓவர்களில் 4 விக்கெட்களுக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இமாம்-உல்-ஹக் (9), அப்துல்லா ஷபிக் (6), ஷான் மசூத் (0), சவுத் ஷகீல் (11) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
பாபர் அசாம் 49 ரன்களுடன், முகமது ரிஸ்வான் 16 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணிக்காக ஹார்மர் 3 விக்கெட்களையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் பெற்றார்.
கைவசம் 6 விக்கெட்கள் இருக்க, 23 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.