“தீவிரவாதத்துக்கு ‘ஹலால்’ நிதி” – உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் நூற்றாண்டு விழாவில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியபோது, ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்கள் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் கூறியதாவது:
“மாநிலத்தில் ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்கும் முன், அதில் ‘ஹலால்’ சான்றிதழ் இல்லையென உறுதிசெய்ய வேண்டும். சோப்பு, துணி, தீப்பெட்டி போன்ற பல்வேறு பொருட்கள் தற்போது ஹலால் சான்றிதழுடன் விற்பனையாகின்றன.
இவ்வாறு விற்பனையாகும் பொருட்கள் மூலம் சுமார் ரூ.25,000 கோடி திரட்டப்பட்டு, அந்த நிதி தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றது. அந்த நிதியைத்தான் அவர்கள் தீவிரவாதச் செயல்களில் பயன்படுத்துகின்றனர்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. பல தடைகளையும் சவால்களையும் கடந்து, இன்று அந்த அமைப்பு நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, இது பெருமைக்குரிய சாதனை” என்றும் குறிப்பிட்டார்.